தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப் பட்டியல் மத்திய அரசினால் வெளியீடு
Thinakaran March 18, 2025
விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, இந்திய மத்திய அரசினால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவற்றில், உபா சட்டத்தின் கீழ் 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.45 அமைப்புகள் கொண்ட பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயரும் அடங்கியுள்ளது.
இந்தியாவுக்குள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்கு வசதியாக, இந்தப் பட்டியலை இந்திய மத்திய அடிக்கடி திருத்தியமைப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல பாப்புலர் ப்ரண்ட் ஒப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக இந்திய மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகள் இந்தியாவில் செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.🔺
